Small Eyes. Big World..

அகிலின் புது பாட்டு…

November 3, 2009 · Leave a Comment

இப்போதெல்லாம் அகிலை ஸ்கூலுக்கு கிளப்புவது பெரும்பாடாகி வருகின்றது. எழுப்பும் போதே கதைகள் – இன்னைக்கு போகமாட்டேன், நாளைக்கு போகிறேன். எப்போதும் ஸ்கூலை வெறுக்கிற ஆசாமி இல்லை அகில். ஆனாலும் நானும் பாப்பாவும் எப்போதும் வீட்டிலேயே இருக்கும் போது தான் மட்டும் ஏன் போகவேண்டும் என்ற எண்ணத்தால் தான் ஸ்கூலுக்கு போக அவ்வளவாக இஷ்டம் இல்லை. ஓரிரண்டு நாட்கள் அழுது ஆர்ப்பாட்டம், மித்த நாட்கள் அவ்வளவு பெரிய சீன் இல்லை, இருந்தாலும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கின்றது அகிலுக்கு.

ஏன்டா போகமாட்டேன் என்கிறாய், என்றால், பதில் – “பாப்பா ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்ச உடனே நானும் போறேன் மா. அது வரைக்கும் வீட்டிலேயே இருப்பேன்…”

நானோ, ” பாப்பா இன்னும் ஸ்கூல் போக ரொம்ப நாள் இருக்குடா, அது வரைக்கும் நீ ஸ்கூலுக்கு போகலை என்றால், உன் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் செக்ண்ட் ஸ்டான்டர்ட் போயிட்டு இருப்பாங்க, அப்போ நீ என்ன பண்ணுவே… இத்தனை நாள் ஸ்கூலுக்கு போகலை என்றால் ஆன்ட்டி உன்னை அவங்க கூட உட்கார வைக்க மாட்டாங்க, பாப்பா கிளாஸ்ல எல்லாரும் குட்டியா இருப்பாங்க, நீ என்ன பண்ணுவே” என்றால் பலத்த சிந்தனை தான் பதில்.  அப்புறம் “சரி பரவாயில்லை, நான் பாப்பாவோடயே போயிக்கிறேன்..”

இப்போதைக்கு எப்படி சமாளித்து இருக்கின்றேன் என்றால் – “அகில், பாப்பா இப்போ ரொம்ப சின்னவளா இருக்கா, கொஞ்ச டைம் வெயிட் பண்ணு, பாப்பா நடந்து, வாயை திறந்து அப்பா, அம்மா, அண்ணா என்று சொல்லட்டும், கப்பென்று கூட்டிகிட்டு ஸ்கூல்ல சேர்த்துடலாம்… இவ்வளவு சின்ன குழந்தையை ஆன்ட்டி சேர்த்துக்க் மாட்டாங்க ஸ்கூல்ல…  அது வரைக்கும் நீ மட்டும் போயிட்டு வந்துடு, அப்புறம் நான் உனக்கு ஒரு சைக்கிள் வாங்கி தரேன், அதில நீயும் பாப்பாவும் போங்க. ஆன்ட்டிகிட்டே இப்போவே சொல்லி வச்சிடு, நம்ம பாப்பாவை ஸ்கூல்ல சேர்த்துக்க..”

சரி என்று சொல்லி இருக்கின்றது, அன்றொரு நாள் வேறு ஏதோ பேசிக் கொண்டு இருக்கும் போது – “அம்மா பாப்பா வாயை திறந்து பேசட்டும், ஸ்கூல்ல சேர்த்திடலாம்…” என்று அது எனக்கு ஞாபகபடுத்திக் கொண்டு இருக்கின்றது.

ஜெயா.

→ Leave a CommentCategories: Akhil · General
Tagged:

அகில் என்று ஒரு விஞ்ஞானி, அனன்யா என்று ஒரு அசின்…

November 2, 2009 · 1 Comment

சாதாரணமாக உங்கள் குழந்தை என்ன ஆகவேண்டும் என்பதை சின்ன வயதிலிருந்தே உட்புகுத்துங்கள், கருவில் இருக்கும் போதே கூட டிரைன் பண்ணலாம் என்று சொல்லுவார்கள். ஏம்பா, கருவில் இருக்கும் குழந்தை நான் இதுவாக போகிறேன் என்று சொல்லுமா என்ன? நம்ம ஆசையை அது மேல திணிக்க வேண்டியது தான்… நீ ஒரு கிரிக்கெட்டரா வரணும், டாக்டராகி ஊருக்கு வைத்தியம் பண்ணனும் என்பது எல்லாம் நம்மளளோட பயாஸ்க்கோப் ஆசைதானே… குழந்தைக்கே விவரம் தெரியும் வயதில தான் அது என்ன ஆக வேண்டும் என்று அதனால் யோசித்து முடிவு எடுக்க முடியும்… ஆனா அந்த வயசு வர்றத்துக்குள்ளே நாம அதை ஒரு பத்து கிளாஸ்ல சேர்த்து, ஒரு பக்கம் விளையாட்டு, ஒரு பக்கம் இசை, ஒரு பக்கம் மூளை வேகமா செயல் படற கிளாஸ் என்று அதை நாலா பக்கமும் பிய்ச்சு எடுத்துடுவோம்… சோ அதோட சுதந்திரத்தை பறிச்சு, நம்ம இஷ்டத்தை தான் அது மேல திணிக்கிறோம்.  எனக்கு குழந்தைகள் இதைத்தான் பண்ணனும் என்ற ஆசை இல்லை, எது அதுக்கு இஷ்டமோ அதை செய்யட்டுமே என்ற எண்ணம் தான்…

என்னதான் சொன்னாலும் உள்மனசின் ஓரத்தில நம்மால நிறைவேற்றிக்க முடியாத ஆசைகளை மூட்டை கட்டி வைச்சு இருப்போம் இல்லையா, அதுல ஒன்னு ரெண்டு என்ன என்றால்…  அகிலை ஒரு பாடகனாக்க வேண்டும். நல்ல கர்னாடிக் இசை சொல்லிக் கொடுத்து பாட வைக்க வேண்டும், கூடவே இரண்டு வாத்தியங்களை வாசிக்கவும் பழக்க வேண்டும். பிரி.கே.ஜி லெயே பாட்டு கிளாஸில் கூட சேர்த்துவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆனால் ஒரு கட்டத்திற்க்கு கிளாஸ் போர் அடிக்கிறது என்று அழ ஆரம்பிக்கவும் போனால் போகட்டும் என்று விட்டு விட்டேன். பிஸினெஸ் மேன் ஆக்கும் ஆசைதான் உங்களுக்கே தெரியுமே… இப்போதைக்கு லிஸ்ட்டில் இன்னொன்று சேர்ந்து இருக்கின்றது – சைன்டிஸ்ட் ஆக்குவது. இப்போது கெமிஸ்ட்ரியில் நோபில் பிரஸ் வாங்கி இருக்கும் ராமகிருஷ்னன், தாமஸ், மற்றும் அடா அவர்களின் கண்டு பிடிப்பை பற்றி படித்ததும், மருத்துவத்திற்க்காக பரிசு வாங்கி இருக்கும் எலிசபெத், கேரோல், மற்றும் ஜேக்  அவர்களைப் பற்றி இந்த வார ஜூனியர் விகடனில் படித்ததும் தான் இந்த ஆர்வகோளாற்றிக்கு காரணம் (பின்னே நமக்கு எல்லாம் சாதாரணமாவே இப்படி தோணுமா என்ன?).

நிஜமாகவே இந்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி படித்துக் கொண்டே இருப்பார்கள். தினமும் அதையே தின்று, அதனுடனே தூங்கி, அத்துடனே வாழ்க்கை நடத்துவார்கள். ஒவ்வொரு நாள் கண்டுபிடிப்பும் முழு கண்டுபிடிப்பை நோக்கி எடுத்து வைக்கும் ஒரு சின்ன படியாக இருக்கும், இப்படியாக வாழ்க்கையின் இன்றியமையாத விஷயமாக ஆகி விடும் அவருடைய கண்டுபிடிப்பு. அது வெற்றிகரமாக முடிவதோ இல்லை ஒன்றிற்க்கும் பிரயோஜனமில்லாமல் போகுமோ அது அடுத்த விஷயம்… பேசாமல் அகிலை ஒரு விஞ்ஞானி ஆக்கிவிட்டால் என்ன? இந்த கிளாஸுக்கு போ அந்த கிளாஸுக்கு  போ என்று அவன் உயிரையும் வாங்க வேண்டாம் :) ஸ்ஸ்ஸ்ஸ் இப்பொதைக்கு நம்ம ஊர்ல விஞ்ஞானி ஆக்க கிளாஸ் எதுவும் இல்லை.

ஆகவே பிற்காலத்தில் அகில் என்று ஒரு இந்தியர்/தமிழர் நோபல் பிரைஸ் வாங்கினா என்னையும் இந்த பதிவையும் நினைச்சுக்கோங்கப்பா…

அனன்யா/அசின் கதை என்ன என்று கேட்கிறீங்களா… மருத்துவமனையில் இருந்து வீடு வந்து பார்த்தா எங்க அம்மா ஒரு கிலோ பாதாம் பருப்பை ஊற வைத்து இருந்தாங்க. சரி பெண் குழந்தை பிறந்ததை கொண்டாட பாதாம் கீர் பண்ணப் போறாங்களோ என்று பார்த்தா, இல்லையாம், குழந்தையோட நிறம் நல்லா வர்றத்துக்காக பாதாம் பருப்பு, குங்கும பூவையும் சேர்த்து மாவு அரைச்சு குளிப்பாட்ட போறாங்களாம்… அடடா ஏற்கனவே குழந்தை என்னைப் போல லட்சனமா இருக்கா (ஹ்ம்ம் சரி சரி…), இன்னும் அசின் / தமன்னா கலருக்கு ஆக்கிட்டாங்க என்றால் சொல்லவே வேண்டாம் போலவே…

ஆனந்த விகடன் அட்டை படத்தில அனன்யா படம் பார்த்தாலும்…. இதே பதிவை நினைச்சுக்கோங்க :) :)

ஜெயா.

 

→ 1 CommentCategories: General

ஆப்ரிக்காட்டின் அம்மா

October 19, 2009 · Leave a Comment

எப்போதும் போல  தீபாவளிக்கு அலுவலகத்தில் கொடுத்த ட்ரை ஃப்ரூட்ஸ் டப்பாவை வீட்டுக் கொண்டு வந்திருந்தேன். அதில் ஆப்ரிகாட் கொட்டைகள் கூட இருந்தது. அகில் அதை பார்த்து என்ன என்று கேட்டவுடன், “இது ஆப்ரிக்காட் காய் டா”  (பழம் எப்படி இருக்கும் என்று அவனுக்கு ஏற்க்கனவே தெரியும்) நாம் பழம் சாப்பிடுவோம் இல்லையா, அதனுடைய காய், பழுப்பதற்க்கு முன்னாடி இப்படி இருக்கும், அதையும்  சாப்பிடலாம் என்று விளக்கினேன்.

அதை கேட்ட அகில் என்னை கேட்டது – “அப்போ இது ஆப்ரிக்காட்டோட அம்மாவா?” என்று…

ஜெயா.

→ Leave a CommentCategories: Akhil · humor
Tagged: ,

அனன்யா என்று ஒரு குட்டி தேவதை…

October 19, 2009 · 7 Comments

பத்து மாத காத்திருப்பிற்க்கு பிறகு கையில் ஒரு குட்டி தேவதை – அனன்யா. ஆப்பரேஷன் தியேட்டருக்கு செல்லும் போது முடிவாக எனக்கு தெரிந்தது நமக்கு பையன் தான் பிறக்க போகிறான்… சரி பரவாயில்லை, இரண்டு பையனை வளர்ப்பது ஒன்னும் அவ்வளவு மோசமாக இருக்காது, எவ்வளவோ பார்த்துட்டோம், இதை பார்க்க மாட்டோமா என என்ற எண்ணத்துடன் தான் உள்ளே சென்றேன். டாக்டர்கள் வந்தவுடன், அவர்களிடம் பிறப்பது பெண்ணோ பையனோ, நீங்கள் பார்த்தவுடனே, “உன்னைப் போல அழகான, அறிவான குழந்தையை பார்த்ததில்லை” என்று சொல்லி குழந்தையை வரவேற்பு கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன், அவர்களும் பயங்கர ஆர்வமாக கண்டிப்பாக சொல்லுகின்றோம் என்று சொல்லி என் வயிற்றில் பாலை (இல்லை இல்லை ஏதோ ஒரு மருந்தை) வார்த்தார்கள்.

அனெஸ்தீஷ்யா கைக்குள் ஏற, கண்கள் சொருகியதுதான் தெரியும். எவ்வளவு நேரம் சென்றதோ கடவுளுக்குத்தான் வெளிச்சம்,  ஒரு டாக்டர் என் கன்னத்தை தட்டி – உனக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கின்றது – 2. ஏதோ ஒரு நம்பர் சொல்லி வெயிட் இருக்கின்றது, ஆரோக்கியமாக இருக்கின்றது என்று சொன்னது எங்கேயோ தூரத்தில் கேட்டது – சந்தோஷம் ஆனால் அதை உணர முடியாத ஒரு நிலைமை இந்த மயக்கதில் இருந்து வெளியே வருவது – எண்ணங்க்ளின் ஓட்டத்தை வேற்று மனுஷியாக நின்று பார்க்கும் அனுபவம். உடல் முழுவதும் ஏதோ ஒரு புது ரத்தம் ஓடத்துவங்குவது போல ஒரு நிலை. சுற்றி நடப்பது எல்லாம் தெரிந்தாலும் ஒன்றும் செய்ய மற்றும் சொல்ல முடியாது – கேட்டது சரிதானா என்று ஒரு தரம் கேட்டுக் கொள்ளக் கூட முடியாது. டாக்டர்கள் வேறு சுற்றி வேலை முடிந்து விட்டது என்று ரவா தோசையை பற்றி வேறு பேசிக்கொண்டு இருந்தனர். அடக்கடவுளே, நான் கேட்டது சரிதானா என்று யாராவது இரண்டாவது தரம் சொல்லுங்களேன்… வாயும் கையும் நம் வசம் இருந்தால் தானே?

சில நிமிடம் கழித்து, திரும்ப தட்டி, கண்ணைதிறந்து பார் என்று சொல்ல, பகிரத பிரயத்தனம் செய்து பார்த்தால் – உள்ளே வந்து சரியாக ஒரு மணி நேரம் ஆகி இருந்தது. சரி என்ன நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று எண்ணிக் கொண்டேன். அந்த பெட்டில் இருந்து தூக்கி இந்த ஸ்ட்ரெச்சருக்கு மாற்றி, தூக்கி ரூம் கட்டிலில் போட்டவுடனே, வெங்கட் குரல், “ஜெயா, சாதிச்சுட்டே .. பெண் குழந்தைதான் பிறந்து இருக்கு நமக்கு… ” அட! இத்தனை நாள் நமக்குள்ளே ஒரு பெண் குழந்தையா இருந்தது? அய்யோ முன்னாடியே தெரிஞ்சு இருந்தா இன்னும் கொஞ்சம் சீராட்டி இருந்திருக்கலாமே… அப்பாடி, ஒரு கவலை விட்டுது…

சரி, ஆனால் மனுஷ மனசு சந்தோஷமா இருக்க் விடுமா, குழந்தை வெயிட் – 2.6 கிலோ தான்.. அய்யோ ரொம்ப கம்மியா இருக்காளே… சே நாம சரியா உடம்பை பார்த்துக்காமே விட்டுட்டோமே, நிறைய நாள் ஒரு தோசை மட்டும் சாப்பிட்டேனே, அன்னைக்கு எல்லாம் கொஞ்சம் நல்லா சாப்பிட்டு இருந்தா குழந்தை நல்லா ஹெல்த்தியா இன்னும் வெயிட்டா பிறந்து இருப்பாளே… குற்ற உணர்ச்சி போட்டு அரித்து எடுக்கிறது. டாக்டரிம் “ரொம்ப குட்டியா இருக்காளே டாக்டர், எப்படி தேத்தறது?” என்றால், அவரோ, “அது எல்லாம் ஒன்னும் இல்லை, குழந்தை நல்லா இருக்கிறா, நீங்க நல்லா பால் குடுங்க போதும், தானா சரியாகிடுவா…” அடடா, இவளை ஒல்லிக்குச்சி குழந்தையில் இருந்து கொழு கொழு குழந்தையாக்கறதே இப்பொதைய தலையாய கடமை..

இந்த கதையில அகிலை பற்றி சொல்ல மறந்துட்டேனே – அகிலுக்கு ரொம்ப சந்தோஷம்தான். குழந்தை எதுவும் ரொம்ப வருத்தம்  தருகிறாற்போல அல்லது மனச்சோர்வு ரியாகஷன் காட்ட வில்லை. குட்டிப் பாப்பா என்றுதான் சொல்லிக் கொண்டு அலைந்து கொண்டு இருந்தது. ஆனால் என்னை ஹாஸ்பிட்டலில் கையில் ஊசி எல்லாம் குத்தி பார்க்கவே ரொம்ப டென்ஷன் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன் – ரொம்ப அன்பாக என்னிடம் இருந்தது. அம்மா இது வேண்டுமா, அது வேண்டுமா என்று வேண்டி வேண்டி கேட்டுக் கொண்டு இருந்தது.  கண்ணில் வேறு கொஞ்சம் கண்ணீர். எனக்கு முத்தம் எல்லாம் கொடுத்து என்னை தேற்றிக் கொண்டு இருந்தது. நானும் முடிந்த வரை அவனுடன் இருக்கப் பார்த்தேன். அவனை கொஞ்சிக் கொண்டு அவன் கதைகளை கேட்டுக் கொண்டும். குழந்தை புது குழந்தை வந்ததும் தன்னை மறந்து விட்டார்கள் என்று ஃபீல் பண்ணக் கூடாது என, முன்னமே வெங்கட்டிடம் யாராவது கூட்டமாக வந்தால் அகிலை வெளியே கூட்டிக் கொண்டு சென்று விடுங்கள் என்று சொல்லி வைத்து இருந்தேன். அதுவும் இல்லாமல் அகில் தினமும் ஒரு மணி நேரத்திற்க்கு மட்டுமே மருத்துவமனைக்கு வந்து கொண்டு இருந்தது, அந்த சமயத்தில் அதன் உணர்ச்சிகளைத்தான் பார்த்தோமே தவிர, நிஜமாகவே வந்திருக்கும் பாப்பா எப்போதும் நம் வீட்டில் தான் இருக்க போகிறது, தன்னுடன் தான் வளரப் போகிறது என்று தெரிந்து இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை…

குழந்தை யார் ஜாடை என்று எல்லாம் தெரியவில்லை – ஆமாம் இருப்பதே ஒரு பெரிய ஓனான் சைஸில் – அதில் எங்கே இருந்து ஜாடை சொல்லுவது? கை கால்கள், விரல்கள் எல்லாம் நல்ல நீட்டமாக இருக்கின்றது – நல்ல உயரமாக வளரும் போல – அய்யோ அகில் கொஞ்சம் குள்ள வாட்டம் ஆச்சே, நாளைக்கு இந்த பெண் அவனை விட உயரமாக வளர்ந்தால் – ரொம்ப அசிங்கமா இருக்குமே, இவனை உயரமாக்க ஏதாச்சும் செய்யனும் போல இருக்கே…

இப்போதான் 10 நாள் ஆகி இருக்கு.. இன்னும் குப்புற படுத்து, தவழ்ந்து, நின்று, நடந்து, ஓடி, பேசி… அப்பா நிறைய இருக்கே, அதுவரைக்கும் நல்லஆரோக்கியமாக இருக்கனும், நல்லா சாப்பிட வைக்கனும், யோசிச்சா கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. அகிலை நாங்க பார்த்து சந்தோஷப்பட்டது போல, அகிலை இந்த குழந்தை வளர்வதை பார்த்து சந்தோஷப்பட வைக்கனும் என்று ஆசை எனக்கு. பார்ப்போம் என்ன நடக்குது என்று…

ananya

ananya

இதுவரைக்கும் ஒரு குழந்தையோட புலம்பலையும் அலம்பலையும் படிச்சுகிட்டு இருந்த உங்களுக்கு, இன்னொரு குழந்தையோட அலம்பலையும் சொல்ல ஆரம்பிக்கப் போறேன் என்று நினைக்கிறேன். நீங்களும் தான், எவ்வளவோ பார்த்த்ட்டீங்க, படிச்சுட்டீங்க… இனி மேல படிக்காமலா இருக்க போறீங்க?

ஜெயா.

பேருக்கும் பதிவுக்கும் கொஞ்சம் சம்பந்தம் இல்லாம தான் போயிடுச்சு, உண்மையில, எப்படி அனன்யா என்று பேர் வைச்சோம் என்று எழுதனும் என்றும் நினைத்தேன், இதுவே பெருசா போகிறதை பார்த்தா, அதையும் எழுத முடியாது போல, அடுத்ததில எழுதறனே …

→ 7 CommentsCategories: General
Tagged: , , ,

கடை இன்றைக்கு(ம்) லீவ்…

September 29, 2009 · 8 Comments

இன்னும் ஒரு வாரம் தான் இருக்கின்றது ஹாஸ்பிட்டலில் சேர்வதற்க்கு – அடுத்த வாரம் இந்நேரம் ஹாஸ்பிட்டல் வாசம் ஆரம்பித்து இருக்கும்.  இருந்தாலும் பரவாயில்லை என்று நேற்று எல்லா சாமான்களும் வாங்கி வைத்துவிட்டோம், ஆனால் கடைசியில் பார்டனருக்கு வேறு வேலை வந்து விட, என்னுடைய அக்காவிற்க்கும் வேறு வேலை இருக்க, சரி  இந்த வாரம் கடை போடுவது ரொம்ப டூ மச் என்று எனக்கும் ஒரு மூளையின் ஒரு ஓரத்தில் சொல்லிக் கொண்டு இருக்கும் குரல் கேட்க, இன்று(27-09-09) எங்கள் கடைக்கு லீவ் விட்டு விட்டோம். உண்மையில் இன்று இரண்டு எக்ஸ்ட்ரா ஐட்டம் வேறு போடுவதாக இருந்தோம் – என்ன என்பது அட- திரும்பவும் “சர்ப்ரைஸ்” தாங்க.

கடையை தேடிவரும் நண்பர்கள் யாரும் ஏமாற்றம் அடைய வேண்டாம் என்றும் கூடிய விரைவில் திரும்பவும் ஸ்பார்க்களர்ஸ் கடை கொட்டிவாக்கம் பீச்சில் வெற்றிநடை போட ஆரம்பிக்கும் என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம் :)

ஜெயா.

பின்குறிப்பு -1: உண்மையாக நான் இதை ஞாயிற்றுக்கிழமை கடை திறக்கும் நேரத்துக்கு முன்னாடியே எழுதி போஸ்ட்டும் பண்ணி விட்டேன். அடுத்த நாள் செக் பண்ணும் போது காணவில்லை… வேர்ட்பிரஸ்ஸை ஜல்லடை போட்டு தேடியும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை… சரி கை தவறி நானே டெலிட் செய்து விட்டேன் பொல என்று எண்ணிக் கொண்டு இருந்த போது -காலையில் தோன்றியது -  ஒரே வின்டோவில் இரண்டு போஸ்ட் எழுதியதில் ஏதாவது சொதப்பிக் கொண்டு இருக்குமோ என்று புதிய ஆறு போஸ்ட்டின் ஆட்டோ சேவ் ஹிஸ்டரியில் போய் தேடிப் பார்த்ததில் – முதல் இரண்டு வெர்ஷன் இந்த போஸ்டாகவும், அடுத்த வெர்ஷன்களி அதற்க்காக டைப் செய்த வெர்ஷன்கள் இருந்தன… வாழ்க வேர்ட்பிரஸ்! கம்பேர் ரெவிஷன்ஸ் பட்டன் சூப்பராக வேலை செய்து என்னை திரும்ப டைப் அடிக்க வைக்க வில்லை :)

பின்குறிப்பு – 2: நாங்கள் கடை போட வேண்டாம் என்று ஒரு பன்னிரண்டு மணிக்கு முடிவு செய்த போது வானம் வெளுத்துத்தான் இருந்தது – ஒரு ஐந்து மணிக்கு கொட்டும் மழை … அடடா கடை மட்டும் போட்டு இருந்திருந்தால் அடாத மழையிலும் விடாமல் ஜூஸ் விற்று வரலாற்றில் நிலை பெற்று இருந்திருக்கவேண்டும் அல்லது காற்றடிக்கும் போது மாவு விற்க போனேன் என்று பாட்டை பாடிக் கொண்டு அள்ளி தூக்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் :)

பின்குறிப்பு -3 : இந்த மழையிலும் பீச்சுக்கு வந்து எங்கள் கடையை தேடி – எனக்கு போன் செய்து “என்ன ஜெயா.. கடையை காணோம் .. உங்க ஜூஸை குடிக்கலாம் என்று மழையிலும் பீச்சுக்கு வந்து இருக்கின்றோம், கடை எங்கே” என்று கேட்கிற பாசக்(நக்கல்)கார தம்பிகளை என்ன சொல்லுவது?

→ 8 CommentsCategories: General
Tagged: , ,

காலை நேரம்… வெயில் வரும் நேரம்….

September 28, 2009 · 2 Comments

ஒரு பத்து நாட்களாக அகிலை காலையில் எழுப்பி விடுகின்றேன் – சாதாரணமாக் எழுந்திருக்கும் நேரம் ஏழு அல்லது ஏழரை – இப்போது மாறிய நேரம் ஆறு ஆறேகால்…

முதல் நாள் எழுப்பிய போது அகில் சொன்னது – “என்னதும்மா ரூமே ஒரு மாதிரி இருக்கு… இருட்டா இருக்கு… என்ன ஆச்சு இன்னைக்கு?”

அடேய், இன்னைக்குதான்டா நீ சூரியன் எழுவதற்க்கு முன்னாடி எழுந்து இருக்கின்றாய்… காட்டமான ஏழு மணி வெயிலுக்கு எழுந்து பழகி விட்டு இப்போது என்னடா என்றால் ரூம் மாறி இருக்கு டையலாக் வேற…

ஜெயா.

→ 2 CommentsCategories: General

புதிய ஆறு

September 27, 2009 · 6 Comments

அகில் இப்போது ஹெட்ஸ்டார்ட் பள்ளியில் எல்.கே.ஜி படித்துக் கொண்டு இருக்கின்றது. நான் மிகவும் ஆராய்ச்சி செய்து அகிலை சேர்த்த பள்ளி இது. பிள்ளைகளை மிகவும் நன்றாக ஹேன்டில் செய்யுமிடம் – செயல்முறை கல்வி, பரிட்சைகள் இல்லாத பள்ளி, நல்ல அணுகுமுறை – (குழந்தைகள் ஆசிரியர்களை ஆன்ட்டி என்றே அழைக்கின்றனர்), குழந்தை வளர்ப்புமுறை மற்றும் கல்விதுறையில் நடக்கும் விஷயங்களை கண்காணித்துக் கொண்டு இருப்பவர்கள், பள்ளி என்றால் வெறும் ஒரு புத்தகத்தில் எழுதி இருப்பதை சொல்லிக் கொடுப்பது என எண்ணாமல் பல வகையில் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை எதிர்கொள்ளுவதே என்பது எல்லாம் என்னை இம்பிரஸ் செய்த விஷயங்கள் சில.

எல்.கே.ஜி யில் அகிலுக்குகான சிலபஸ் – a – z மற்றும் 1 – 10 வரைதான். அதையே வேறு வெறு வகையில் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இப்போதுதான் எழுதுவது ஆரம்பித்து இருக்கின்றது. எல்.கே.ஜியிலேயே போர்ஷன்ஸ் கொடுத்து டெஸ்ட் வைக்கும் பள்ளிகளுக்களுள் இது கொஞ்சம் வித்தியாசமான அணுகுமுறைதான்.

எண்களை அடையாளம் சொல்ல தெரிந்தாலும், சொல்லத் தெரிந்தாலும், இப்போதுதான் எழுத ஆரம்பிக்கிறான் அகில். இன்றைக்கு சாக்பீஸ் வைத்து எழுதிக் கொண்டு இருந்த போது ஆறு எண் மட்டும் வேறு மாதிரி எழுதினான்…

என் அம்மா: ஹேய் அகில் – என்னடா ஆறு மாத்திரம் வேறு மாதிரி எழுதி இருக்கின்றாய்?

அகில்: ஒரு வினாடி யோசித்துவிட்டு – இதுதான் அம்மம்மா புது ஆறு.

என் அம்மா: ??????????

ஜெயா.

→ 6 CommentsCategories: General
Tagged: , , ,

கழுவினா போயிடுமா?

September 25, 2009 · 2 Comments

அகில்: அம்மா, பச்சை மிளகாயை தொட்டா கை எரியுமா?

அம்மா: ஆமாண்டா அகில்

அகில்: காம்பை பிடிச்சா கூட எரியுமா?

அம்மா: ஆமாம் அகில், ஆனா தொட்டுட்டு கையை கழுவிட்டா எரியாது… கண்ணில் வைச்சா கூட எரியாது.. அதனால கையை கழுவிடு என்ன?

அகில்: அப்போ பச்சை மிளகாயை கழுவிட்டா அது எரியாதா??

அம்மாவாகிய நானேதான்: ??????

ஜெயா.

→ 2 CommentsCategories: Akhil · humor
Tagged: ,

புதிய ஜோக்…

September 21, 2009 · 8 Comments

அகிலுக்கு எப்போதும ஜோக்குகள் ரொம்ப பிடிக்கும். வார புத்தங்களில் வரும் ஜோக்குகளில் அவனுக்கு புரிகிற மாதிரி இருக்கின்ற ஜோக்குகளை அவனுக்கு கதைகளாக சொல்லுவேன். இப்போதைய ஜோக் :

ஒரு ராஜா இருந்தாராம், அவர் ரொம்ப சோகமாக இருந்தாராம். ஒரு ராணி இன்னொரு ராணி கிட்டே கேட்டாங்களாம் ராஜா ஏன் சோகமா இருக்கிறார் என்று. அதுக்கு இன்னொரு ராணி சொன்னாங்களாம் – புதுசா வந்து இருக்கிற ராணி மன்னரை ‘மன்னா’ என்று கூப்பிடறதக்கு பதிலா ‘அண்ணா’ கூப்பிட்டாங்களாம் …

சொன்னவுடன் அகிலுக்கு ரொம்ப சிரிப்பு வந்தது… தினமும் ஒரு முறையாவது இதை சொல்லி சிரிப்போம். புரியாமல் சிரித்தது என்று நான் மனசை தேற்றிக் கொண்டு இருக்கின்றேன்…

ஜெயா.

→ 8 CommentsCategories: Akhil · humor
Tagged: ,

கொட்டிவாக்கம் பீச் கடை – முடிவுகள்

September 21, 2009 · 9 Comments

முதலில் படிக்க: கொட்டிவாக்கம் பீச்சில் கடை

முக்கால் வாசி சாமான்கள் சனிக்கிழமையே வாங்கி வைத்துவிட்டு இருந்தாலும் சில ஞாயிற்றுக் கிழமையன்று வாங்கி கொள்வது போல நேர்ந்தது. அந்த சாமான்களை வாங்கிக் கொண்டு, சொல்லி வைத்த இடத்திலிருந்து ஐஸ் வாங்கி அதை உடைத்து, சோடாவை அதில் போட்டு, மற்ற சாமான்களையும் காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு கொட்டிவாக்கம் பீச்சுக்கு சென்று சேர்ந்த போதே மணி ஐந்தரை. ஜங்கஷனில் போலிஸ்காரர் வேறு நின்று கொண்டு இருந்தார். அதுவரை இருந்த தைரியம் அப்படியே கொஞ்சம் காணாமல் போவது போல இருந்தது…  எப்படிடா இறக்குவது என்று கால்கள் வேறு பின்னடித்தது. எந்த இடத்தில் வைப்பது என்று வேறு குழப்பம். ஏற்க்கனவே இருந்த கடைகளின் நடுவில் வைத்து விடுவதா இல்லை தனியாக ஒரு இடத்தில் வைப்பதா? புதிதாக நாம் போய் அவர்கள் நடுவில் வைத்தால் ஏதாவது சொல்லுவார்களா, தனியாக வைப்பதால் கூட்டம் வருமா என்று வேறு யோசனை.

தந்தியடித்து இருந்த எங்களுக்கு துணையாக என் அக்கா வந்தார்கள் – ஏற்க்கனவே அவர்கள் பிஸினெஸ் லைனில் இருப்பதால் தைரியமாக தடாலடியாக நிலைமையை கையில் எடுத்துக் கொண்டு, எங்களுக்கு ஏற்கனவே தெரிந்த இளநீர் கடைக்காரை கரெக்ட் செய்து அவர் பக்கத்தில் இடம் பிடித்தார். அவர் மூலமாகவே போலிஸ் இன்ஸ்பெக்டரிடம் கூட விஷயத்தை சொல்ல வைத்தோம். இன்ஸ்பெக்டர் எங்களிடம் நேரடியாக கேட்கவில்லை என்றாலும், அவரிடம் இன்றைக்கு ஒருநாள் மட்டும்ம் தானா? அப்படிஎன்றால் பரவாயில்லை, தினமும் என்றால் – ஸ்டேஷனுக்கு வந்து இன்ஸ்பெக்டரிடம் பேச வேண்டும் (ஓ அப்ப நீங்க இன்ஸ்பெக்டர் இல்லையா? )என்று சொன்னார். கண்டும் காணாமல் நாங்கள் டிக்கியில் இருந்து சாமான்களை இறக்கி வேலையை ஆரம்பித்தோம்.

முதலில் டேபிளை ஃபிக்ஸ் செய்து, சாமான்களை எல்லாம் எடுத்து வைத்து அடுக்கி ஜுஸ் கடை என்று ஆரம்பித்தோம். போகிறவர்கள் அனைவரும் ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு போனார்களே தவிர யாரும் கிட்டே கூட வரவில்லை – பின்னே ஒரு நிறைமாத கர்ப்பினிப் பெண், ஒரு நாலு வயசு குழந்தை, ஜீன்ஸ் பேன்ட் சகிதமாக இன்னொரு பெண், ஒரு சாஃப்ட்வேர் கெட் அப் பையன் – முன்னாடி ஒரு டேபிள் அதிலே ஒரு தெர்மாகோல் டப்பா, ஜூஸ் டம்பளர்கள், நாலு டப்பர்வேர் டப்பாக்கள், சோடா பாட்டில்கள் சகிதமாக நின்றால் மக்கள் என்னதான் நினைக்க கூடும்?

தைரியமாக ஒருவர் வந்து நீங்கள் என்ன பண்ணிக் கொண்டு இருக்கின்றீர்கள் என்று கேட்பதற்க்கே பத்து நிமிடம் ஆகியது – நாங்கள் ஒரு ஜூஸ் விற்கிறோம் – பெயர் ஸ்பார்க்களர்ஸ் – புதினா மற்றும் எலுமிச்சம் சேர்த்த ஒரு புதிய வகை சோடா கூல் டிரிங்க்ஸ்  – விலை இருபது ரூபாய் என கூறி முதல் போனியை செய்தோம். அதன் பின்னர் ஒன்றிரண்டாக மக்கள் வந்து வாங்கிக் கொண்டு இருந்தனர்… அகில் கையில் ஒரு  மாட்டிக்கொண்டு இப்படி அப்படி ஓடிக் கொண்டு இருந்தது. எல்லோருக்கும் மூடி போட்டு ஸ்ட்ரா போட்டு டிஷ்யு பேப்பர் வைத்து தந்தான். ஆனால் யாராவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல வில்லை – கொஞ்சம் சங்கோஜமாக தான் ஃபீல் பண்ணிக் கொண்டு இருந்தான். நடுவில் அதுவே இரண்டு ஜூஸ் குடித்துக் கொண்டு இருந்தது. போலிஸ் காரருக்கும், இளநீர் கடைக்காரருக்கும் ஒரு ஜூஸ் இலவசமாக (காக்காய் பிடிப்பதற்க்காக என்று படிக்காதீர்கள்) கொடுத்தோம்.

இப்படி அப்படியாக கடை திறந்த ஒரு மணி நேரத்தில் ஒரு 15 கப் விற்றி இருப்போம். அதற்க்குப்பறம் நான் போய் உட்கார்ந்து கொண்டேன் பார்ப்பவர்களின் பரிதாபப்பார்வையே காரணம் :) என் அக்காவின் கை ஜாலத்தால் நன்றாகவே போய்க் கொண்டு இருந்தது. இன்னும் ஒரு அரை மணி நேரம் முடிந்த போது ஒரு 440 ரூபாய்க்கு விற்றிருந்தோம் – 500 ரூபாயை தொட்டவுடன் கடையை ஏறக்கட்டி விடலாம் என்று பார்த்தால் – யாரும் வாங்குகிறா மாதிரியே காணோம்…  ஒரு 20 நிமிஷம் காத்திருந்திருப்போம், பொறுமை போய்க் கொண்டு இருந்தது, திடீரென்று நிறைய பேர் வந்துவிட்டனர் – ஒரு கும்பல் எட்டு பேர் கொண்டது, அப்புறம் ஒரு 4 பேர் என திரண்டு வந்து விட்டனர்.  ஒரு கட்டத்தில் கொண்டு போன புதினா தீர்ந்து போய் விட்டது – அத்தோடு கடையை ஏறக்கட்ட வேண்டிய நிலைமை தானாக ஏற்ப்பட்டு விட்டது. அப்படியும் வந்து கேட்டவர்கள் இருவருக்கு புதினா இல்லாமல் அட்ஜஸ்ட் செய்து போட்டுக் கொடுத்து விட்டோம். அதன் பின்னரும் கூட வந்து கேட்டவர்களுக்கு முடிந்து விட்டது என்று சொல்லும் படி ஆகிவிட்டது. குடித்தவர்களிடம் எப்படி இருந்தது என்று கேட்டதற்க்கு, நன்றாக் இருந்தது என்று தான் பதில் வந்தது – சும்மாகாட்டிக்கா இல்லை நிஜமாகவே சொன்னார்களா என்று தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

நிறைய கற்றுக் கொண்டோம் – நிறைய இடத்தில் சொதப்பினோம் – மார்கெட்டிங்கும் பிரண்டேஷனும் ரொம்பவே இம்புரூவ் பண்ண வேண்டி இருக்கின்றது என்று தெரிந்து கொண்டோம், காரை கொண்டு வந்து எல்லாவற்றையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். காரிலேயே அகிலை பாராட்டிக் கொண்டு வந்தோம். “அகில் உன்னுடைய முதல் சம்பாத்தியம், வீட்டுக்கு போனவுடன் உன் பங்கை தந்து விடுகிறோம் – நீ சிட்டி சென்டரில் உனக்கு பிடித்த பொம்மையை நீயே வாங்கிக் கொள்ளலாம், சூப்பர்மா நல்லா பிஸினெஸ் பண்ணிட்டியே” என அவனை அவனுடைய வெற்றியை கொண்டாட வைத்தோம். பின்னே குழந்தை இரண்டு மணி நேரம் கால் கடுக்க (ஒரு சேர் அல்லது ஸ்டூல் கூட கொண்டு செல்லவில்லை நாங்கள்) நின்று வேலை செய்திருக்கின்றது, இது கூட சொல்லவில்லை என்றால் எப்படி. வீட்டுக்கு வந்ததும், சும்மா சேர்ந்த காசை அவனிடமே எண்ண விட்டு, அவனுக்கு என்று 200 ரூபாய் கொடுத்து விட்டோம்.

ஹைலைட்ஸ் என்ன என்றால் – கும்பல் அதிகமாக இருந்த போது அக்காவே எல்லா வேலையும் செய்து கொண்டு இருக்க, அகில் ரொம்ப சத்தமாக ” பெரியம்மா – நீங்களே எல்லா வொர்க்கும் பண்ணிடறீங்க, என்னையை பண்ணவே விட மாட்டேங்கறீங்க” என்று கம்பெளைன்ட் பண்ணினது. இருந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர்.

நல்ல அனுபவம், போட்ட காசில் பாதியை திரும்ப எடுத்து விட்டோம், இன்னும் இரண்டு வாரம் சென்றால் மீதியையும் எடுத்துவிடலாம். அகில் இன்று காலை எழுந்ததில் இருந்து அம்மா இன்னைக்கு கடை போடலாமா என்று கேட்டுக் கொண்டு இருக்கின்றது, இல்லைடா சன்டே மட்டும் தான் என்றால், இல்லம்மா இன்னைக்கும் போடலாம் என்று என்னை கன்வின்ஸ் பண்ண டிரை பண்ணிக் கொண்டு இருந்தது.

கொட்டிவாக்கம் பீச் ஹிஸ்ரியில் ஸ்பார்களர்ஸ் விற்று அழியா இடம் பெற்று விட்டோம், அதிலும் லேன்சரில் சென்று ஜூஸ் விற்றவர்கள் நாங்களாகத்தான் இருப்போம் :) வந்து எங்கள் ஜூஸ் கடையில் வந்து ஜூஸ் குடித்த அனைவருக்கும் ஒரு பெரிய நன்றி, இந்த வாரம் முடியாதவர்கள் அடுத்த வாரம் வந்து உங்கள் ஆதரவை தருவீர்களாக.

ஜெயா.

→ 9 CommentsCategories: General
Tagged: , , , ,