அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் தோழியின் திருமணதிற்க்காக பரமகுடி செல்ல நேர்ந்தது. ராமேஸ்வரம் அங்கே இருந்து பக்கம் என்ற காரணத்தாலும் சனிக்கி்ழமை ஊர் சுற்றி பார்க்க நேரமும் இருந்ததால் ராமேஸ்வரத்திற்கு பயணமானோம். மணப்பெண்ணுடைய அப்பாவின் தயவில் தெரிந்தவர் ஒருவர் வந்து அழைத்து சென்றார். முதலில் கடலுக்கு சென்றோம். ராமர் இலங்கைக்கு செல்ல பாலம் கட்ட ஆரம்பித்த போது, அலைகள் வந்து அடித்து கொண்டே இருந்ததாகவும், ராமர் ஒரு அம்பு விட்டு கடலில் அலை இல்லாமல் செய்ததாகவும் புராணம். ஆனால் அது கடலா அல்லது back waterஆ என்ற சந்தேகம் வந்தது. எண்ணூர் அருகில் உள்ள back water’ல் கூட அலைகள் வந்து பார்த்ததில்லை நான். அது நிஜ கடல் தானா இல்லை, ராமேஸ்வரத்தில் வேறு எங்காவது கடல் இருக்கின்றதா, அங்கு அலைகள் அடிக்கின்றதா என்ற துப்பறியும் வேலை எதுவும் செய்ய நேரம் இல்லாததால் சொன்ன கதையை நம்பி விட்டு வந்தோம்.

பின்னர் கோவிலுக்குள் சென்றோம், குட்டி யானை ஒன்று வரவேற்றது. தீர்த்த குளியல் போடுவதாக எண்ணம் இருந்ததால், ஐம்பது ரூபாய் கொடுத்து ஆரம்பித்தோம். சிறிய வாளி ஒன்றை வைத்துக் கொண்டு கிணற்றில் இருந்து குளிர்ந்த நீர் எடுத்து தலை மேல் ஊற்றுவதை, பக்தி ஊற்றெடுக்காமலும் கூட ரசிக்கலாம். அகிலுக்கு ஒரே சந்தோஷம், குதியாட்டம் போட்டு நனைந்து கொண்டு வந்தது. ஒரளவிற்க்கு அருகருகில் தான் இருந்தன தீர்த்தங்கள். மொத்தம் 21, பாதிக்கு மேல் உப்பு தண்ணீர்தான், என்ன பின்கதை என்று தெரிந்து கொள்ளுவதற்க்கு எல்லாம் நேரம் இல்லாததாலும், இருக்கவே இருக்கின்றது கூகிள் என்ற எண்ணத்தில் மூளைக்கு வேலை கொடுக்கவில்லை.

மிக அழகான மற்றும் பெரிய கோவில், ஆனால் முழுவதையும் சுற்றி பார்க்க முடியவில்லை. நடை சாத்தும் நேரம் நெருங்கி கொண்டு இருந்ததால், தரிசனம் தவறி விடக் கூடாதே என்ற எண்ணத்தில் அவசரமாக தான் பார்க்க முடிந்தது. சற்று நேரத்தில் எங்களுடன் மிகவும் வயது முதிர்ந்த இரண்டு  ஐயர் தம்பதியினர் சேர்ந்து கொணடன்ர். ஒவ்வொரு தீர்த்ததையும் மிகவும் பக்கியுடனும், ராமா ஈஸ்வரா என்று கடவுள் பேரை சொல்லியும், போன ஜென்ம புண்ணியம் எனவும், செய்த பாவம் எல்லாம் தீர்ந்து கொண்டு இருக்கின்றது என்ற எண்ணத்துடனும் ஒவ்வொரு தீர்த்ததையும் அனுபவித்து குளித்து கொண்டு இருந்தனர். அவர்களை பார்க்கும் போதுதான், நாம் சுற்றுலா தளத்திற்க்கு வர வில்லை என்றும், கோவிலுக்கு வந்து இருக்கின்றோம் என்ற எண்ணம் தலைக்காட்டிக் கொண்டு இருந்தது.

மொத்த தீர்த்ததையும் முடித்துக் கொண்டு, உடைமாற்றி சுவாமி தரிசனத்திற்க்கு சென்றோம். நல்ல கூட்டம் இருந்த்ததால் நேரம் முடிந்தாலும் தரிசனம் நடை பெற்றுக்கொண்டு இருந்தது. கடவுளாக இருந்தாலும் காசு முக்கியமாக கருதும் கலிகாலம் அல்லவா? சிறிய லிங்கம்,  அழகிய தீப அலங்காரத்துடன் தீபாராதனை, கையில் விபூதி பிரசாதம் என வெளியே வந்தோம். மதிய வேளை, மேலும் வரிசையான தீர்த்த குளியல், வயிற்றில் பசி கிள்ளியது. கோவிலிலேயே நடை பெறும் அன்னதானத்தில் சாப்பிடலாம் என்று அன்னதான சாலைசக்கு சென்றோம். நல்ல கொட்டை புழுங்கல் அரிசி சாதம், பீட்ரூட் பொரியல், தக்காளி பருப்பு, கத்திரிக்காய் சாம்பார், ரசம், மோர் என நன்றாகவே இருந்தது சாப்பாடு. ரசம் பழங்கால மூக்கு கிண்ணியில் ஊற்றியதாலோ என்னமோ ரொம்ப நன்றாக இருந்தது. எங்களில் பாதி பேரால் வைத்த சாதத்தை சாப்பிட முடியாமல் போகவே, இலை எடுக்கும் பெண்மணி நேருக்கு நேர் திட்டிக் கொண்டு இருந்தார். காசு கொடுத்து ஹோட்டலில் வாங்கும் பண்டத்தையே சாப்பிடாமல் வைத்து வரும் நம் சென்னை மாநகர மக்களுக்கு, தர்ம சாப்பாட்டினை மிச்சம் வைத்தத்ற்க்காக திட்டு வாங்குவது புது அனுபவம் அல்லவா?  நாங்கள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் நேரத்தில், கோவிலுக்காக வெளியூரிலிருந்து வந்திருக்கும் எத்தனையோ ஏழை எளிய மக்கள் வந்து பசியாறி சென்றனர், பார்ப்பதற்க்கு நிறைவாக இருந்தது.

கூட இருந்தவர்கள் புண்ணியத்தால் தொலையாமல் தூண்கள் நிறைந்த அழகிய பிரஹாரத்தை தாண்டி வெளியே வந்தோம். அடுத்து தனுஷ்கோடி செல்வதற்க்கு எல்லாம் நேரம் இல்லாதபடியால், அருகில் இருக்கும் ஒரு சில இடத்துக்கு செல்லலாம் என முடிவாகி ஆட்டோவில் ஏறினோம். முதலில் சென்றது ராமர் பாதம். மாடிப்படி ஏற சோம்பேறிதனமாக இருந்த காரணத்தால் ஒரு இலந்தவடை வாங்கிக் கொண்டு கீழேயே அமர்ந்து விட்டேன். எலந்தபழம் விற்றுக் கொண்டு இருந்த அம்மா, ராமர் பிரசாதம் இலந்த பழம் என்று அசகாய பீலா விட்டுக் கொண்டு விற்றுக் கொண்டு இருந்தார். ராமர் எந்த காலத்தில் இலந்தபழம் தின்றார் அது, பிரசாதமாவதற்க்கு? நம்புவர் இருந்த்தால் அவர், இதுதான் ராமர் சாப்பிட்ட பழம் என்று கூட சொல்லி விற்று விடுவார் போல இருந்தது. அடுத்து சென்றது ராமர் தீர்த்தம். ஒரு குளம், நிறைய மீன்கள், இரண்டு ரூபாய் டிக்கெட் இதனை பார்ப்பதற்க்கு.. கேட்டால் ராமர் குளித்த இடமாம். சோப்பு போட்ட இடம் எங்கே என்ற புத்திசாலிதனமான கேள்விக்கு என் வீட்டுகாரரின் முறைப்பு மட்டுமே பதிலாக கிடைத்தது. அது எப்படி, லிங்கத்தை வழிபட்ட இடம் வேறு, பாத அச்சு இருக்கின்ற இடம் வேறு, குளித்த இடம் வேறு, லக்ஷ்மனர் குளித்த இடம் வேறு, ஆஞ்சனேயர் கோவில் வேறு இடம்,  என ராமேஸ்வரத்தின் மூலை முடுக்கு எல்லாம் ராமர் சென்று இருந்தார் என தெரியவில்லை.

ஒரு அண்டா தண்ணீரில் ஒரு கல் மாதிரி பொருளை போட்டு, இது தான் சேது கால்வாயின் ஒரு கல் – மூழ்காமல் மிதக்கின்றது பாருங்கள் என காட்டி தனி பூஜை செய்து கொண்டு இருந்தனர். கல் போல அல்ல, ஓட்டை ஓட்டையாக உள்ள கடல் பாறை போல இருந்தது. பதினைந்து கிலோ கல், ஆனால் நீரில் மூழ்காமல் மிதந்து கொண்டு இருக்கின்றது என்று விளக்கி கொண்டு இருந்தார் ஒருவர்.  இது உங்களுக்கு எப்படி கிடைத்தது என்று கேட்டால், இப்போது சமீப காலத்தில் சேது சமுத்திர திட்டத்திற்க்காக தோண்டியபோது கிடைத்தது, நாங்கள் காசு கொடுத்து வாங்கி இருக்கிறோம் என்று சொன்னார். தோண்டிய போது கிடைத்தது என்றால் அது வரை எப்படி இந்த கல் மூழ்கியா இருந்தது என்ற அறிவுப்பூர்வமான கேள்விக்கும் பதில் இல்லை… 200 டன் எடையுள்ள கப்பலே மிதக்குது கடலில், பதினைந்து கிலோ கல்லா என்று தெரியாத ஒரு பொருளை காட்டி கதை சொல்லிக் கொண்டு இருக்கின்றீர்களே, என்று எண்ணிக்கொண்டு வந்தேன். அத்துடன் போதும் சுற்றுலா என பஸ் நிலையத்திற்க்கு வந்து, பரமகுடி பஸ் ஏறினோம்.

மொத்த ஊரூக்கும்  ஒரே selling point – ராமர். தொட்டதிற்க்கெல்லாம் அவர் பெயரை வைத்து பணம் பிடுங்கும் கும்பலின் பிடியில் சிக்காமல் வந்தால் பெரிய விஷயம் என்று நினைக்கிறேன். அடுத்த பெரிய தொழில் மீன் பிடிப்பு. ஊர் முக்கால்வாசி கருவாடு வாசனையின் பிடியில் – இது வேறு சீசன் டைம் போல, நெல் அறுவடை செய்து போடுவது போல, மீன்கள் காய்ந்து கொண்டு இருந்தன. நல்லவேளை ராமர் சாப்பிட்ட மீன்களின் வம்சாவளி மீன்கள், வாங்கிக் கொண்டு போங்கள் என சொல்லவில்லை.  பாம்பன் பாலம் காண்பதற்க்கு இனிய காட்சி. காரில் சென்று இருந்தால் நின்று ரசித்து பார்த்திருந்து போட்டோக்கள் எடுத்து இருந்திக்கலாம், பஸ் பயணமாதலினால் அப்படியே ஜன்னலின் வழியே பார்த்து சென்றாயிற்று.

ஆக மொத்தம் ராமர் வாழ்ந்தாரோ இல்லையோ, ராமேஸ்வரம் அவர் பேர் சொல்லி நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றது.

ஜெயா.