டூருக்கு செல்வது, ஊர் சுற்றுவது, தண்ணியில் விளையாடுவது, ராத்திரியில் ட்ரெயினில் பயணிப்பது எல்லாமே அகிலுக்கு ரொம்ப பிடித்தது. அதிலும் ஒரு கும்பலுடன் சென்றுவிட்டால் போதும், அதன் ஆட்டத்திற்க்கு அளவே இருக்காது. வயதில் ஐந்து மடங்கு பெரியவர்களையும் டேய் என்று கூப்பிட்டு ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கும். இப்படியாக ஒரு பில்ட் அப்பில் அடுத்த ஆபிஸ் டூருக்கு என்னால் போகமுடியவில்லை என்றாலும் அகிலையும் வெங்கட்டையும் அனுப்பலாமே என்ற ஒரு நல்ல எண்ணத்தில் டிக்கெட் புக் பண்ண சொன்னேன்.
ஊட்டியில் பார்சன் வேலி என்ற அத்து வனாந்திரம் – ஆபீஸில் வேலையை மட்டுமே பார்த்து களைத்த கண்களுக்கும், கேர்ள் பிரண்டோடு மொக்கை போட்டே களைத்த வாய் மற்றும் காதிற்க்கும் ஓய்வு கொடுக்கும் வகையில் சுற்றி ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு மலை பிரதேசம், செல் போன் டவர் இன்னும் நிறுவப்படாத ஒரு காட்டேஜ். முக்கியமாக ஏதேனும் பேச வேண்டும் என்றால் கூட ஒரு கிலோமீட்டர் தூரத்திற்க்கு நடந்து ஒரு லைட் போஸ்ட் அருகே அவசரத்திக்கு ஒதுங்கும் நாய் போல ஒற்றைகாலை தூக்கிக் கொண்டு மொபைலை ஒரு ஆங்கிளில் பிடித்தால் மட்டுமே சிக்னல் கிடைக்கும்.
வெங்கட்டிற்க்கு இந்த ஐடியாவை முதலில் கேட்டதுமே முகத்தில் மரணபயம் தெரிந்தது. நான் மட்டுமா, இவனை ஊட்டிக்கு தனியா கூட்டிகிட்டு போகனுமா என்று மிரண்டவரிடம், நீங்கள் மட்டுமில்லை கூட 20 பேர் வருகிறார்கள், எல்லா ஏற்பாடுமும் முன் கூட்டியே செய்தது, நீங்கள் சும்மா கூட போய்ட்டு வந்தா போதும் என்று சொல்லியும் தெளியவில்லை. கொஞ்ச நேர தயக்கதிற்க்கு பின்னர் தன் வாழ்க்கையில் எடுத்திருக்கும் மிக பெரிய சேலன்ஞாக கருதி சரி போய் வருகிறேன் என்று ஒத்துக் கொண்டார்.
அகிலும் ரொம்ப ஆர்வமாக கிளம்பியது.. பள்ளியில் போட்டோ செஷன் திங்கள் கிழமை என்று பார்த்தும் பக்கென்று இருந்தது, ஐயோ குழந்தை குருப் போட்டோவில் மிஸ் ஆகுமே என்று, அதனிடம் டூரா இல்லை போட்டோவா என்றதற்க்கு ஒரு யோசனையே இல்லாமல் டூர் என்று சொல்லி ஸ்கூலுக்கு திங்கள்கிழமை மட்டம் தான் போட போகிறேன் என்று தெளிவாக சொல்லிவிட்டது.
பெரிய பில்ட் அப்புடன் பெட்டி அடுக்கி, பாதி சொப்பு சாமான், கிராஃப்ட் பேப்பர், கத்திரிகோல், கம், கிரேயான்ஸ் என கோலாகலமாக கிளம்பியது. டிரைவரை அழைத்துக் கொண்டு சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு கிளம்பினோம். வெங்கட் டிரிப்பில் குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற என் லெக்சரை கேட்டு காது ஓட்டை ஆகாத குறையாக வந்து கொண்டு இருந்தார் – அடுத்தவர் எதிரில் அகிலை திட்ட கூடாது, அது செய்கிற காரியத்தை செய்யாதே என்று சொல்லக்கூடாது, நீங்கள் சொல்லியும் அது செய்வதை நிறுத்தாது என்று தெரிகிற போது நிறுத்து என்று சொல்லவே சொல்லாதீர்கள், குழந்தை புது இடத்தை பார்த்து எக்சைட் ஆகி ஏதாவது குறும்புதனம் செய்தால் பொறுத்து கொள்ளுங்கள், உங்கள் டென்ஷனை குழந்தையிடம் காட்டாதீர்கள், எல்லாவற்றிக்கும் மேலாக நீங்கள் என்ஜாய் செய்யுங்கள் என்ற போது மனுஷர் முகம் போன பாடு காண சகிக்கவில்லை. இது எல்லாவற்றையும் சொல்லி என்ஜாய் செய்ய சொல்லுகிறாய் பார், அங்கேதான் உன் வில்லத்தனம் முழுவதாக தெரிகிறது என்று ஃபீல் பண்ணிக் கொண்டு இருந்தார்.
ட்ரெயினை பார்த்தவுடன் ஜாலி ஆன அகில் உடனடி மேனேஜர் அவதாரமெடுத்து எல்லாரையும் அதட்டி உருட்டிக் கொண்டு இருந்தது. என்னை ட்ரெயினின் உள்ளேயே ஏற விடவில்லை, அவன் அப்பாவை கீழே இறங்க விடவில்லை, விவரமாகத்தான் இருக்கிறது…. ட்ரெயின் கிளம்பிய உடன் டாடா காட்டிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.
காலையில் போன் செய்த போது டிரியெனில் இருந்து இறங்கி டிபன் சாப்பிட்டு விட்டு ஊட்டிக்கு மலை ஏறிக் கொண்டு இருப்பதாக சொன்னார், குழந்தை ஜாலியாக இருப்பதாகவும் தெரிந்தது. ஊட்டியில் இருந்து பார்சன் வேலிக்கு செல்லும் வரை பேசிக் கொண்டு இருந்தேன், பின்னர் தொடர்பு இல்லாத காரணத்தால் பேசிக் கொள்ள முடியவில்லை. குழந்தை இல்லாமல் வீடே வெறிச்சோடிவிட்டாற் போல் இருந்தது, எப்படியடா இன்னும் இரண்டு நாட்களை கழிப்பது என்று யோசித்துக் கொண்டு அபூர்வமாக கிடைக்கும் தனிமையை அனுபவித்துக் கொண்டு இருந்தேன். கஸின் கொடுத்து இருந்த ஒரு மனிதன், ஒரு வீடு ஒரு உலகம் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.
என்னடா தலைப்பிற்க்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை என்று யோசித்துக் கொண்டு இருக்கிறீர்களா? இங்குதான் இன்டெர்வெல் விடுகிறார்கள். திருப்பம், மசாலா, அழுகை, சென்டிமென்ட், விறு விறுப்பு எல்லாம் இனி மேல் தான் ஆரம்பம்.
ஞாயிறு காலை ஒரு 11 மணிக்கு போன் அடித்தது, வெங்கட் நம்பர்… அடடா எங்கிருந்தோ சிக்னல் கிடைத்தது போல பேசுகிறாரே என்று ஒரு ஆர்வத்தில் போய் போன் எடுத்து, நம்முடைய பீக் ஃபார்மில் ஹலோ ட்ரிப் எப்படி போய் கொண்டு இருக்கிறது? எங்கே இருந்து போன் செய்கிறீர்கள், குழந்தை எப்படி இருக்கிறான்? என்று சூப்பர் எக்சைட்டாக கேட்டால், மனுஷர் குரலே காணோம், “ஹெலோ முதல்ல சொல்லறதை கேளு, நாங்க ஊட்டிக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறோம், காருக்காக வெய்ட் பண்ணிக் கொண்டு இருக்கிறோம், பார்சன் வேலியில் இருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கிறோம், அகில் அழுது கிட்டு இருக்கிறான், உனக்கு போன் பண்ணலாம் என்று பண்ணினேன்..”
பனி மலைகள் உடைகின்றன, எரிமலை வெடிக்கின்றது, கடல் பொங்கிறது, பறவைகள் வேகமாக சிறகடித்துப் பறக்கின்றன… எல்லாம் என் மனக்கண்ணில் தான். நான் அனுப்பிய பில்ட் அப் டூர் என்ன, இங்கே நடந்து கொண்டு இருப்பதென்ன.. “என்ன ஆச்சு வெங்கட் குழந்தை ஏன் அழுவறான், நாளைக்குதானே நீங்க ஊட்டிக்கு வரணும், எதுக்கு கார் எல்லாம் புக் பண்ணி இருக்கீங்க? எங்கேயாவது விழுந்து அடிபட்டுவிட்டதா?”
” வேன்ல வரும் போது பசங்க ஆயிரத்தில் ஒருவன் படம் போட்டாங்க.. அதில இது மாதிரியே கொஞ்ச பேர் காட்டுல போகிறமாதிரி சீன் வரும், அப்புற தண்ணி இருக்கும், அதில பூச்சிகள் ஓடும், அந்த காட்சியை பார்த்து அகில் பயந்து போயிட்டான், இங்கேயும் அதே மாதிரி காடு, தண்ணி எல்லாம் இருக்கவே குழந்தை அதை லிங்க் பண்ணி பயந்து போய், வரமாட்டேன் என்று ஒரே அழை. ரொம்ப கன்வின்ஸ் பண்ணி அழைச்சுகிட்டு போனேன்… டார்மென்ட்ரியில் இருந்து வெளியே வரவேஇல்லை.. இங்கே அது மாதிரி பூச்சி வருமா, காடு இருக்குமா என்று கேள்வியா கேட்டுக் கொண்டு இருந்தான். சுற்றி பார்க்கிற இடத்துக்கு எல்லாம் வரலை என்று சொல்லிட்டான். எவ்வளவு நேரம்தான் உள்ளேயே இருக்க முடியும், ரொம்ப அழுதான், அதனால ஊட்டிக்கே போயிடலாம் என்று கிளம்பிட்டேன்.. ஊட்டியை சுற்றிபார்த்துட்டு கிளம்பி வந்துடறோம், இந்தா நீ பேசு அகில் கிட்ட”
அடகடவுளே, இது என்ன சோதனை.. செல்வராகவன் எங்க வாழ்க்கையில இப்படி விளையாடனுமா, அவரும் சோனியா அகர்வால் பிரிந்ததை கூட எங்க காசிப் கேங்கில நாங்க ரொம்ப டிஸ்கஸ் பண்ணி அவர் வயித்தெரிச்சலை கொட்டிக்கலையே… ஆன்டிரியா வேறு எனக்கு பிடித்த பாடகிகளில் ஒருவர்.. அப்படியும் எப்படி ஆன்டிகிளைமாக்ஸாகி விட்டது என தெரியவில்லையே
“அகில் கண்ணா”
“ம்ம்…”
“என்னம்மா ஆச்சு, பயந்திட்டியா…”
“ம்ம்…”
குழந்தையின் பயத்தை மதிக்கும் படியாக… “ஓ அப்படியா.. என்ன செய்வது… ரொம்ப பயந்திடாதே, பூச்சி எல்லாம் வராது அங்கே… அப்பா இருக்கார் இல்லையா எல்லாம் பார்த்துப்பார்” அதுதான் அந்த இடத்தை விட்டே வந்து விட்டதே அதனிடன் இனி மேல் அதைப் பற்றி பேசி என்ன பிரயோஜனம்? “கார் வந்ததும் ஊட்டிக்கு வந்திடு, அங்கே நல்லா சுற்றி பார்த்துவிட்டு சென்னைக்கு வந்திடு..”
“சரி” அடடா, ஒரு வார்த்தையில் பதில் சொல்லுமளவு ஆகிவிட்டதே நம் குழந்தை… சாதாரணமாக காட்டை பார்த்து பயப்படும் குழந்தை அல்ல அகில், போன தரம் கேரளா டூர் ஆகட்டும், திருநெல்வேலி டூரிலும் கூட நன்றாக பேசிக் கொண்டு நடந்து கொண்டு இருந்தது. மம்மி படத்தை நான் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல சொல்ல ஒரு கண்ணை மூடிக் கொண்டு அந்த பூச்சிகளின் வரவை பார்த்தது ஒரு ஆறு மாதத்திற்க்கு முன்னாலேயே… அந்த படம், சவுண்ட் எஃப்கெட், சுற்றுபுற சூழல், எல்லாம் சேர்ந்து குழந்தையை பயமுறுத்தி விட்டது போல.
“சரி வெங்கட், பேசாமல் நைட் பஸ்ஸிற்க்கே டிக்கெட் எடுத்து வந்து விடுங்கள்.. பாவம் ரொம்ப பயந்து போய் இருக்கிறது போலவே குழந்தை…”
“ஆமாம் அப்படித்தான் இருக்கிறது. இன்றைக்கே கிளம்பிவிடுகிறோம்…”
அந்த அத்துவனாந்திரத்தை வெளியே வந்ததுமே தெளிந்து விட்டது போல குழந்தை.. மறுபடி வாலை கொஞ்சம் அவிழ்த்துவிட்டு ஆட்டம் காட்டியது போல, உட்டியில் இருந்து போன் பேசும் போது எல்லாம் தெளிவாக பேசியது, அம்மா வீட்டுக்கு டிக்கெட் வாங்கிட்டோம், இன்னைக்கே வந்திடறோம் என்று எல்லாம் கூறியது. அப்புறமாக எனக்கு தோன்றியது, அழுகை சரியாகிவிட்டது என்றால் இருந்து நாளைக்கே டிரையினியில் எல்லோருடனும் சேர்ந்து வந்துவிடலாமே என… அதை அகிலிடம் சொன்னேன், ” அகில் ஒரு ஐடியா சொல்லறேன் கேளு, இப்போ நல்லா ஊட்டி சுற்றி பார்த்துட்டு, ஹோட்டலில் ஒரு ரூம் எடுத்து தங்கிடு, நாளைக்கு எல்லாரும் அங்கே வந்திடுவாங்க, திரும்ப ஒரு தரம் நல்லா சுற்றி பார்த்துட்டு டிரெயினில் நாளைக்கு கிளம்பி வந்திடு…”
“போம்மா இந்த ஐடியா ரொம்ப பெரிசா இருக்கு, நல்லாவும் இல்லை… நான் இன்னைக்கே வந்திடறேன்..”
அதற்க்கு மேல் என்ன சொல்லுவது, டிபன் சாப்பிட்டு விட்டு பஸ் ஏறிவிட்டது போல… பஸ்ஸில் லைட் ஆஃப் செய்யும் போது அகில் கேட்டது போல – “அப்பா ஏன் லைட் ஆஃப் பண்ணறாங்க…”
“அப்போதான் எல்லாரும் தூங்குவாங்க..”
“அப்போ டிரைவரும் தூங்கிட்டார் என்றால் பஸ் யார் ஓட்டுவாங்க?”
குழந்தை ரொம்பதான் பயந்து போய் இருக்கிறது போலவே, “இல்ல அகில், மூனு ட்ரைவர் இருப்பாங்க, மாறி மாறி ஓட்டுவாங்க” என்று சொல்லியும் கொஞ்ச நேரம் முழித்துக் கொண்டு உட்கார்ந்து இருந்ததாம்..
வீட்டுக்கு ஒரு ஏழு மணிக்கு என்ட்ரியானார்கள். ஆஸ்டேரிலியா போய் வந்ததை விட அதிக களைப்பு தெரிந்தது வெங்கட் முகத்தில்… குழந்தை ஓடி வந்து அதன் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டது. யாரும் டூரை பற்றியோ பயந்ததைப் பற்றியோ ரொம்ப விசாரிக்கவில்லை. சரி ஸ்கூல் போட்டோவிற்க்கு நிற்ப்பதற்க்காவது ஸ்கூலுக்கு கிளம்பி போ என தயார் செய்ய ஆரம்பித்தேன்.
சாப்பாடு ஊட்டும் போது சொன்னேன், “அகில் சினிமாவில் வருவது எல்லாம் நிஜம் இல்லை… நிறைய சும்மாதான்..”
அகிலின் பதில் – “அந்த மாதிரி காடுகள் இந்தியாவில் இல்லைதானே அம்மா?” அடப்பாவி நீ இதை ஊட்டியிலியே கேட்டு இருக்க கூடாதா?
“ஆமாம் அகில்.. அது மாதிரி வெளி நாட்டில்தான் இருக்கும்.. இங்கே இல்லை..”
சரி ஒரு கல்லில் மூன்று மாங்காய்களாக ஒரு ஓ.பி. டூருக்கும் போய் விட்டு, ஸ்கூல் போட்டோவில் போசும் கொடுத்து விட்டு, வெங்கட்டை ஒரு மினி டெரர் டிரிப்புக்கும் அனுப்பிய நிம்மதியோடு அடுத்த வேலையை கவனிப்போம்..
அங்கே இருந்த கொஞ்ச நேரத்தில் அகில் ஆடிய ஆட்டத்தின் கிளிக்குகள் இங்கே :
ஆசை ஆசையாக டூருக்கு அனுப்பி, பீதியாக திரும்பி வந்ததே என்று நினைத்தால் கஷ்டமாகத்தான் இருக்கின்றது… எதிர்பாராதது நடப்பதும் எதிர்பார்த்தது நடக்காததும் தானே வாழ்க்கை. போன வருஷத்தின் கேரளா டூரின் அனுபவமும் போட்டோவும் இங்கே.
ஜெயா.
Mar 19, 2010 @ 17:13:04
//கொஞ்ச நேர தயக்கதிற்க்கு பின்னர் தன் வாழ்க்கையில் எடுத்திருக்கும் மிக பெரிய சேலன்ஞாக கருதி சரி போய் வருகிறேன் என்று ஒத்துக் கொண்டார்//
இல்லையே, கல்யாணத்தப்ப இன்னும் பல மடங்கு யோசிச்சதா சொன்னாங்களே!!!
கூட போன கூட்டத்தை எல்லாம் சமாளிச்சிட்டாரு!!! அதை விட என்ன பெரிய பய்முறுத்துற கூட்டம் வந்துடப் போகுது???
Mar 22, 2010 @ 13:56:20
நரேஷ், என்ன ரொம்ப நாளா ஆளைக் காணோம்?
கல்யாணத்தின் போது வெங்கட் ஒரு வித மயக்கதில் இருந்ததால் ரொம்ப யோசிக்கலை, இப்போ தினமும் யோசிக்கறார் அது வேற விஷயம் 🙂
கூட்டத்தை பற்றி வெங்கட்டுக்கு தெரிந்த அளவிற்க்கு அகிலுக்கு தெரியவில்லை என்பதுதான் மேட்டர், அதனால தான் குழந்தை பயந்துடுச்சு…
ஜெயா.